தமிழ்நாடு

மயக்கமடைந்ததுபோல் நடித்து புரோகிதரிடம் நகைகள் திருட்டு...ரேபிடோ ஓட்டுநரை கைது செய்த போலீஸ்

By Jayakumar
21 Aug 2025, 09:26 AM
மயக்கமடைந்தது போல நடித்து புரோகிதரிடம் இருந்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற ரேபிடோ ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை
சென்னை எம்ஜிஆர் நகர் சீத்தலை சாத்தனார் தெருவச் சேர்ந்தவர் 61 வயது முதியவர் அனில்குமார். வாடகை வீடு எடுத்துத் தங்கி புரோகிதம் செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி அனில்குமார் தனது மகளின் செல்போன் மூலம் ரேபிடோ பைக் புக் செய்தார்.

ரேபிடோ ஓட்டுனர்

நீலாங்கரையில் புரோகிதம் செய்ய வேண்டி இருந்ததால் அங்குச் சென்றுவிட்டு அதே ரேபிடோ பைக்கில் வீடு திரும்பினார்.இதன் பிறகு அந்த ரேபிடோ பைக் ஓட்டுனர் அடிக்கடி அனில்குமாருக்கு போன் செய்து பைக் வேண்டுமா எனக் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இதில் பழக்கம் ஏற்பட்டதால் ரேபிடோ ஓட்டுனர் அவரிடம் தான் கஷ்டப்படுவதாகக் கூறியதாகத் தெரிகிறது.

உடனே அனில்குமார் பழைய துணிகள் இருப்பதாகவும், அதை வேண்டுமானால் வீட்டில் வந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார். உடனே ரேபிடோ ஓட்டுனர் தனது நண்பர் ஒருவரை அழைத்து நேற்று முன்தினம் எம்ஜிஆர் நகர் வீட்டிற்கு வந்தார்.

நகைகள் திருட்டு

அப்போது ரேபிடோ ஓட்டுனர் திடீரென மயங்கி விழுந்தது போல் நடித்ததாகத் தெரிகிறது.அனில்குமார் உதவி செய்தபோது கவனத்தை திசைத்திருப்பி அவர் அணிந்திருந்த தங்க நகைகளைத் திருடிவிட்டார். அவர்கள் புறப்பட்ட பிறகே தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அனில்குமார் இதுகுறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி ரேபிடோ ஓட்டுனரை கைது செய்தனர். விசாரணையில், அவர் அயனாவரத்தைச் சேர்ந்த டேவிட் இளவரசன் (23) என்பதும் அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கைதான அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரான கங்காதரனை போலீசார் தேடி வருகின்றனர்.