Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்.. நியாயம் கேட்ட தாயின் மீது நாயின் உரிமையாளர்கள் தாக்குதல்..!

By VASUKI
21 Apr 2025, 10:38 AM
சென்னையில், 12 வயது சிறுவன் வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நாயை கட்டி வைக்குமாறு சிறுவனின் தாய் கூறிய நிலையில், அந்த நாயின் உரிமையாளர்கள் சிறுவனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீனத். இவரது மகன் ஜமால் ( வயது 12 ). நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நின்றுக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதா என்பவர் வளர்த்து வரும் நாய் ஜமாலின் காலில் கடித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, ஜமாலை அவரது தாய் ஜீனத், மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வீடு திரும்பிய நிலையில் இந்த சம்பவம் குறித்து நாய் உரிமையாளரான கீதா என்பவரிடம் நாயை கட்டி வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் பிரச்சனை ஏற்பட கீதாவும் அவரது மகன் விக்கி இருவரும் இணைந்து ஜீனத் என்பவரை கன்னத்தில் அடித்து தாக்கியாக கூறப்படுகிறது. இதனால், ஜீனத் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் சமீபகாலமாக வளர்ப்பு நாயின் உரிமையாளர்கள் தங்களது நாயைக்கொண்டு தெருவிலும், அருகில் வசிக்கும் நபர்களின் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு நாயை விட்டு கடிக்க வைக்கும் சம்பவமும், தொடர்ந்து அவர்களின் மீது தாக்குதல் நடத்தும் சம்பவமும் தொடர்கதையாகி வருகிறது.

பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் வளர்ப்பு நாய் தொடர்பான பிரச்னைகள் அதிகரிப்பதால், நாயின் உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.