தமிழ்நாடு

பெகாசஸ் வழக்கு: சேதவிரோதிகள் செல்போனை ஒட்டுகேட்பதில் தவறில்லை - உச்சநீதிமன்றம்

By VASUKI
29 Apr 2025, 06:45 PM
தனிநபர்களின் உரிமையை பாதிக்காதவரை தேசத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை என பெகாசஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் உளவு மென்பொருளை நாட்டின் எதிர்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள்,நீதிபதிகள், செயற்பாட்டாளர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் உள்ளிட்டோர், உச்சநீதிமன்ற தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் சூர்ய காந்த், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது பெகாசஸ் அறிக்கையானது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை குறித்தது என்பதால் அதன் விவரங்களை பகிரங்கப்படுத்த முடியாது என நீதிபதிகள் கூறினர். பெகாசஸ் மூலம் பாதிக்கப்பட்டோமா என்பதை அறிய, ஒருவர் நீதிமன்றத்தை நாடி பதிலை பெற்றுக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை மறைமுகமாக சாடி, தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு கவனமாக செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அரசின் கண்காணிப்பில் இருந்து தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.

உளவு மென்பொருளை ஒரு நாடு பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை எனவும் தேசத்தின் பாதுகாப்புக்காக சிலருக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் எனவும் கூறினார். ஆனால் தனிநபரை குறிவைத்து அவருக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து மட்டும் பரிசீலிக்கப்படும் என்றும், தேச விரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்பதில் என்ன தவறு? அதில் தவறில்லை. தனிநபர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக புகார் தெரிவித்தால் அது குறித்து விசாரணை நடத்த தயார் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


.