Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

முகத்தில் கொப்பளங்களுடன் வந்த பயணி.. குரங்கு அம்மை என்ற சந்தேகத்தால் பரபரப்பு

By nagalekshmi
07 Feb 2025, 08:34 AM
இலங்கையிலிருந்து வந்த திரிபுரா மாநில பயணி ஒருவருக்கு முகத்தில் கொப்பளங்கள் இருந்த நிலையில் குரங்கு அம்மனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் அதிகாரிகள் அவரை தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியதால்  விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைநகர் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நள்ளிரவு  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து யாருக்காவது காய்ச்சல் மற்றும் உடலில் மாற்றங்கள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து கொண்டு இருந்தனர். 

அப்போது விமானத்தில் வந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவருக்கு முகத்தில் கொப்பளங்களாக இருந்தன. இதை கண்டுபிடித்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பயணியை  வெளியில் அனுப்பாமல் நிறுத்தி வைத்து தனிமைப்படுத்தி விசாரித்தனர்.

அப்போது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பயணி, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், நான் இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்றிருந்தேன். அங்கு அழகு சாதன கிரீம் என்று விற்பனை செய்தனர். அதை வாங்கி என் முகத்தில் தடவினேன். அதனால் இதைப் போல் கொப்பளம் வந்துவிட்டது என்று கூறினார். 

ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள், திரிபுரா மாநில பயணி கூறியதை முழுமையாக நம்பவில்லை. அவரின் முகம் மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள கொப்பளங்கள், குரங்கு அம்மனாக இருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  உடனடியாக தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து திரிபுரா மாநில ஆண் பயணியை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அந்நபருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சந்தேகத்தில் திரிபுரா மாநில பயணியை சென்னை விமான நிலைய சுகாதாரத்துறை அதிகாரிகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். பரிசோதனையில் முடிவில் தான் அது பற்றி தெரிய வரும். ஆனால் அவருக்கு குரங்கு அம்மன் நோய்க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அழகு சாதன கிரீம் என்று வாங்கி தடவியதில் ஏற்பட்ட கொப்பளங்களாக தான் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே பயணிகள் யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை, என்று தெரிவித்தனர்.