தமிழ்நாடு

லீவா, இல்லையா?.. கன்ஃபியூஸ் ஆன பெற்றோர்கள்.. பிள்ளைகளை தயார்படுத்தியது வீண்

By leninakathiya
12 Nov 2024, 10:35 PM
தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக இரண்டு மாறுபட்ட தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

வங்க கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக நேற்று நள்ளிரவில் இருந்து சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்தும், பல இடங்களில் மழையானது கொட்டித்தீர்த்தது வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில், இது தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து இடி மின்னலோடு மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா என கேள்வி எழுந்தது.

இதனிடையே, சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 6.30 மணிக்கு அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக காலை 7.14 மணிக்கு மற்றொரு  தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. இதனால், காலை 6.30 மணிக்கு வழங்கப்பட்ட, தகவலை அடுத்து பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்தினர்.

அவர்கள் பள்ளிக்கு செல்லும் வேளையில், சென்னை மாவட்டத்திற்கு பள்ளி விடுமுறை வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, மீண்டும் மழையில் நனைந்து கொண்டே பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் அளிக்காததால், பெற்றோர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.