Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

1994-ல் பதிவான கொலை வழக்கு..31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய குற்றவாளி!

By MUTHUKRISHNAN
20 Apr 2025, 09:14 AM
1994-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தேடப்பட்ட வந்த குற்றவாளி 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 1994-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் (குற்ற எண். 525/ 1994) சம்மந்தப்பட்ட இரண்டு எதிரிகளில், முதல் எதிரி அப்போதே கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு பின்பு 2005-ஆம் ஆண்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் இரண்டாம் எதிரி கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை கைது செய்ய வேண்டி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில், அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்களின் விசாரணையில், A2 எதிரி அசாம் மாநிலம் திப்ருகார் என்ற இடத்தில் தலைமறைவாக இருப்பதாக தெரியவர, அதனடிப்படையில் தனிப்படை போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு திப்ருகார் சென்று இரண்டாம் எதிரியை அடையாளம் கண்டு 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை 18.04.2025-ம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை தமிழ்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.