தமிழ்நாடு

காதல் தகராறில் காதலனைத் தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி: வெளியான அதிர்ச்சி வீடியோ!

By Jayakumar
08 Aug 2025, 11:30 AM
காதல் தகராறில், தன்னைக் குடும்பத்தினருடன் வந்தபோது வழிமறித்துத் தொந்தரவு செய்த காதலனை, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அசோக்நகரைச் சேர்ந்த 21 வயதான கார்த்திகேயன் என்பவர் தச்சராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். உயிருக்குயிராகக் காதலித்த இருவரும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட சில பிரச்சினைகளால் பிரிந்து பேசாமல் இருந்தனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திகேயன், காதலியைச் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, மாணவி தன் தாயுடனும், தங்கையுடனும் கே.கே.நகரில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றதை அறிந்த கார்த்திகேயன் அங்குச் சென்றார்.

கோயில் வாசலில் மாணவியை வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தினருடன் இருந்தபோதும் கார்த்திகேயன் தகராறு செய்ததால், ஆத்திரமடைந்த மாணவி, அருகே கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்துக் கார்த்திகேயனின் தலையில் பலமாகத் தாக்கினார். இதனால் படுகாயமடைந்த கார்த்திகேயன், அங்கேயே சுருண்டு விழுந்தார்.

இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் சென்ற பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாகப் பல தவறான தகவல்களும் பரவின.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.கே.நகர் காவல்துறையினர், காயமடைந்த கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காகக் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து காவல் நிலையம் சென்ற கார்த்திகேயன், தன் காதலியுடன் சமாதானமாகச் செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் எழுத்துபூர்வமாகத் தெரிவித்துச் சென்றார். இதன் மூலம் இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்தது.