Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கவின் கொலை வழக்கு.. சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சிபிசிஐடி காவல்!

By Christon
11 Aug 2025, 07:29 PM
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின், கடந்த ஜூலை 27-ஆம் தேதி பாளையங்கோட்டை, கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கவின் காதலியின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், காவலில் உள்ள அவரது தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸ் விசாரணை தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

நீதிமன்ற விசாரணை

இந்த மனு திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (வன் கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம்) இன்று (ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, சுர்ஜித் மற்றும் சரவணனின் வழக்கறிஞர், “சிபிசிஐடி போலீஸ் காவலில் இருவருக்கும் பாதுகாப்பு இல்லை. கைது நடவடிக்கையும் முறையாகப் பின்பற்றப்படவில்லை” என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதி ஹேமா, "கைது நடவடிக்கை சட்டவிரோதமா என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது" என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சுர்ஜித் மற்றும் சரவணன் இருவரையும் இரண்டு நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், அவர்களை ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சுர்ஜித் மற்றும் சரவணனை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.