தமிழ்நாடு

நானும் கவினும் உண்மையாக காதலித்தோம்.. சுர்ஜித்தின் சகோதரி வெளியிட்ட வீடியோ!

By Christon
31 Jul 2025, 04:01 PM
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி அருகே நடந்த ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் காதலி என கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித், அவரது பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கவினின் தோழியும், சுர்ஜித்தின் சகோதரியுமான சுபாஷினி, வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

காதல் மற்றும் குடும்ப பின்னணி

சுபாஷினி தனது வீடியோவில், "நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம். எங்கள் வாழ்க்கையில் நிலைபெற கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. மே 30 ஆம் தேதி, என் சகோதரன் சுர்ஜித் கவினிடம் பேசியிருக்கிறான். அப்போது, எனது அப்பாவிடம் 'நீ காதலிக்கிறாயா?' என்று கேட்டபோது, நான் 'இல்லை' என்று கூறினேன். ஏனெனில், கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். அதற்குள் இந்தத் துயரச் சம்பவம் நடந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

சகோதரரின் செயல் மற்றும் வதந்திகள்

சுபாஷினி தொடர்ந்து பேசுகையில், "என் சகோதரன் சுர்ஜித்துக்கும், கவினுக்கும் இடையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், கவினுக்கு போன் செய்த சுர்ஜித், 'பொண்ணு கேட்க வாங்க' என்று சொல்லியிருக்கிறான். 'எனக்குத் திருமணம் முடிந்தால்தான் என்னுடைய தொழிலைப் பார்க்க முடியும்' என்று கவின் சொல்லியிருக்கிறான். அது எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்றோரின் நிலை குறித்த கோரிக்கை

மேலும் ஒரு வீடியோவில், "கவினுக்கும் எனக்குமான உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். கவின் கொலையில் என் பெற்றோருக்குத் தண்டனை கொடுப்பது தவறு. என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது. என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம். என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்" என சுபாஷினி உருக்கமாகக் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணையும் கைது நடவடிக்கைகளும்

திருநெல்வேலி அருகே கடந்த ஜூலை 27 ஆம் தேதி ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, கவின் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவின் குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசியல் கட்சிகளும் கவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், நேற்று இரவு வழக்கில் சம்பந்தப்பட்ட சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சரவணனை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர் தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுர்ஜித்தின் தாயையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை பெற்றுக்கொள்வோம் என அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.