தமிழ்நாடு

கரூர் சோகம்: "இதுபோல் இனி எங்கும் நடக்கக்கூடாது"- நிர்மலா சீதாராமன்

By Christon
29 Sep 2025, 05:36 PM
கரூர் துயர சம்பவம் போல் இனி நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் துயரம் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். கரூரில் நடந்தது "பெரும் துயரம்" என்று வருத்தம் தெரிவித்த அவர், இந்த விவகாரம் குறித்துக் குற்றச்சாட்டுகள் இருந்தால், மாநில அரசின் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பிரதமர் உத்தரவின் பேரில் வருகை

அப்போது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கரூர் சம்பவம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தோம். ஆனால், ஆறுதல் தெரிவிப்பதோடு, சிகிச்சை குறித்து விசாரிக்க பிரதமர் எங்களை அனுப்பி வைத்தார்" என்று கூறினார்.

"சம்பவ இடத்தை பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களைச் சந்தித்தோம். உயிரிழந்த சிலர் குடும்பங்களைப் பார்த்தோம். அவர்கள் வருத்தத்தை எங்களால் விவரிக்க முடியவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஏழைக் குடும்பத்தினர்" என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

பிரதமர் நிவாரண உதவி

"இந்தச் சம்பவம் மனதை உலுக்குகிறது. பிரதமர் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார். இன்று இரவுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் நிவாரண உதவி வரவு வைக்கப்படும்" என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

"குற்றச்சாட்டுகளை மாநில அரசிடம் கூறுங்கள்"

இந்தச் சம்பவத்தின் பொறுப்பு மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, மத்திய அமைச்சர் திட்டவட்டமாகப் பதிலளித்தார்.

"நான் இங்கு வந்தது பிரதமர் சார்பில் இங்குள்ள நிலை குறித்து தெரிந்துகொள்ள மட்டும்தான். யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் பிரதிநிதியாக வந்துள்ளோம். மற்ற விசயங்களைப் பேச வரவில்லை," என்று அவர் கூறினார்.

மேலும், "இனிமேல் தமிழ்நாடு மட்டுமல்ல, நம் நாட்டில் இதுபோல் எங்கும் நடக்கக்கூடாது. மக்களுக்கு எங்கள் பயணத்தின் மூலமாக நம்பிக்கை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நடந்த சம்பவம் பற்றி தெரிந்துகொள்ள மட்டுமே வந்தோம்," என்று அவர் தெரிவித்தார்.

"மாநில அரசின் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை அவர்களிடம் சொல்லுங்கள்," என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.