தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு.. முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

By VASUKI
22 Apr 2025, 01:04 PM
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 67 பேர் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யபட்ட இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என தெரிவிக்கபட்டது.
மனுதாரர்கள் தரப்பில், 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டது.

இதையடுத்து வழக்கில் தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.