Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

By VASUKI
27 Feb 2025, 02:45 PM
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறவிருந்த போரட்டத்திற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.பாலசந்தர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால் அந்த உத்தரவாதம் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை.

எனவே மின்சார வாரியத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும் நாளை போரட்டம் நடத்த அனுமதிக்கோரி கடந்த 4ம் தேதி தமிழக டிஜிபிக்கு மனு அளித்தும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுவை பரீசிலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்தார்

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் போரட்டம் நடத்துவது தொடர்பாக சம்மந்தபட்ட மாவட்டங்களில் உள்ள காவல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை என தெரித்தார்.

காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி போராட்டம் நடத்த அனுமதி மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.