Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னையில் திடீரென பெய்த கனமழை.. நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

By nagalekshmi
16 Apr 2025, 01:02 PM
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
கோடைக்காலம் என்பதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதிலும், சென்னையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், இன்று (ஏப்.16) சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காலை 10 மணிக்கு மேல் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

வாகன ஓட்டிகள், அலுவலகத்திற்கு செல்வோர் உட்பட பலர் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் சாலைகள் குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தொடர்ந்து, மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது.

மும்பையில் இருந்து 145 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து 160 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கவுகாத்தியிலிருந்து 138 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து 125 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.

அதன் பின்பு மும்பையில் இருந்து சென்னைக்கு தரையிறங்க வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பி சென்றது.
இதேபோல், டெல்லி, மும்பை, கொச்சி, கோவை, தோகா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மழை காரணமாக சென்னை விமானம் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.