Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பொறியாளரிடம் 4.67 கோடி ரூபாய் அபேஸ்... நொடிபொழுதில் காணாமல் போன பணம்... என்ன நடந்தது?

By nishika
03 Oct 2024, 12:30 PM
ஓய்வு பெற்ற பொறியாளரிடம் FedEx கொரியர் மூலம் 4.67 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் கிரைம் மோசடி கும்பல் தொடர்ந்து முதியவர்களை குறி வைத்து மோசடிகளை அரங்கேற்ற ஆரம்பித்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக FedEx கொரியர் மோசடி மூலமாகவும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் தொடர்பிருப்பதாகவும் கூறி மிரட்டி பண பறிக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐ வி ஆர் எனப்படும் தானியங்கி செல்போன் அழைப்புகள் மூலம் முதியவர்களை கூறி வைத்து இந்த மோசடி நடைபெறுகிறது. மும்பை மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் எனக் கூறி பேசுபவர்கள் மிரட்டி முதியவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த 72 வயது ஓய்வு பெற்ற பொறியாளர் 4.67 கோடி ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடி உங்களுடன் இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில், ஓய்வு பெற்ற பொறியாளர் தனக்கு ஒரு போன் அழைப்பு வந்ததாகவும், அதில் தன்னுடைய செல்போன் இணைப்பு இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்படும் என்றும், மேலும் தகவலுக்கு எண் 09 அழுத்துமாறு IVR எனப்படும் பதிவு செய்யப்பட்ட குரலில் அழைப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய செல்போன் எண், ஆதார், வங்கி கணக்கு, கேஸ் சிலிண்டர் இணைப்பு இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த எண் துண்டிக்கப்படகூடாது என்ற காரணத்தினால் எண் 09 அழுத்தியதாக கூறியுள்ளார். அந்த போன் அழைப்பில் பேசிய  நபர் உங்கள் போன் நம்பர் மற்றும் ஆதார் எண் பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, ஹவாலா பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதால், உங்கள் மீது மும்பை மற்றும் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி உங்கள் கால் மும்பை போலீஸிற்கு இணைக்கின்றோம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

மும்பை போலீஸ், உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி உங்கள் பெயரில் பல வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, பெடெக்ஸ் கொரியர் மூலம் சட்டவிரோதமான போதை பொருட்கள், போலி பாஸ்போர்ட், 257 ஏடிஎம் கார்டு, புலி தோல் ஆகியவை அடங்கிய பார்சல் ஒன்று சுங்கதுறையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்மந்தமாக விசாரணைக்கு இரண்டு மணி நேரத்தில் மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் இல்லையெனில் உங்களை கைது செய்வோம்  மிரட்டியதாக தெரிவித்துள்ளார். தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க அவர்களிடம் கேட்டபோது வழக்கு விசாரணைக்கு வீடியோ கால் மூலம் ஒத்துழைத்தால் உங்களை விடுதலை செய்கிறோம் என்று நம்பவைத்து டிஜிட்டல் அரஸ்ட் என்ற அடிப்படையில் வீட்டிலே தனிமைபடுத்தி இருக்க சொல்லியுள்ளனர். பின்னர் உங்கள் கணக்குகளில் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என ஆராய வேண்டும் என்று கூறி  வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்பு தொகை அனைத்தையும் RBI வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 30 நிமிடங்களில் வங்கி கணக்கு சரிபார்த்து உங்கள் பணம் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று நம்பவைத்து சுமார் 4.67 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் கூடிய வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார். 30 நிமிடம் ஆகியும் பணம் திரும்ப வராததால் இது குறித்து விசாரிக்கும் பொழுது பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் ஏமாற்றியது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், சென்னை மத்திய குற்ற பிரிவில் உள்ள சைபர் கிரைம் பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வில்லிவாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியியை சேர்ந்த சில நபர்கள் ஹவாலா மூலம் வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவதும், அதற்கு நிகரான அமெரிக்க டாலராகவும் மாற்றியும், கிரிப்டோகரன்ஸிகளை பெற்றுக்கொண்டு  மாட்டிக்கொள்ளாமல் பணப்பரிவர்த்தனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கு தொடர்பாக வங்கி பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தும், செல்போன் எண்களையும், மெயில் ஆகியவற்றை சைபர் கிரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதேபோன்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரூ. 53 லட்சம் பணம் மற்றும் இந்த சைபர் கிரைம் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள், செக்புக், ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சைபர் கரைம் மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்குகளைதொடங்கிக் கொடுத்து கமிஷன் பெற்ற நபர்கள் இவர்கள் என தெரியவந்துள்ளது. மணி மியுல்களாக செயல்பட்டு பலரிடம் அடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை சட்டவிரோதமாக சைபர் கிரைம் மோசடி கும்பலுக்கு பணப்பரிவர்த்தனை செய்யவும் உதவியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலில் கைதானவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இது சம்மந்தமாக சென்னை  காவல் ஆணையர் அருண், “முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று வரும் போலியான விளம்பரங்கள், முதலீட்டு செயலிகள் மற்றும் வலைதளங்களை நம்பி அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். இவ்வகை குற்றங்களுக்கு, வங்கி கணக்குகள் துவங்கி மோசடிகாரர்களுக்கு வங்கி பரிவர்த்தனை செய்து கொடுப்பவர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள் ஆவர்” என எச்சரித்துள்ளார். மேலும் மோசடி மூலமாக ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி ( https://cybercrime.gov.in ) தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.