தமிழ்நாடு

சென்னையில் பிரபல ஜவுளிக்கடை கொள்ளை வழக்கு.. உத்தரபிரதேசத்தில் ஒருவர் கைது!

By VASUKI
26 Apr 2025, 01:41 PM
சென்னை, பிரபல ஜவுளிக்கடை, கொள்ளை வழக்கு, உத்திரபிரதேசம், காவல்துறை, தனிப்படை, கைது
சென்னை தி.நகரில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடையில், கடந்த பிப்ரவரி மாதம் ரூ.9 லட்சம் கொள்ளைப்போன வழக்கில், உத்திரப்பிரதேசத்தில் வைத்து கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.


சென்னை தி.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் குமரன் சில்க்ஸ் ஜவுளி கடையில், கடந்த பிப்ரவரி மாதம் வியாபாரத்தை முடித்துவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்று விட்டு, அடுத்த நாள் காலை கடையை திறப்பதற்காக வந்து போது 4-வது மடியில் உள்ள கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.9 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இது தொடர்பாக கடையின் காசாளர் அஜித் என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை விசாரணை மேற்கொண்ட போது 4வது மாடியில் சினிமா பட பாணியில் ஏசி பேன் வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையர்கள் பால்சீலிங்கை உடைத்து அதன் மூலமாக உள்ளே நுழைந்து 4 வது மாடியில் உள்ள காசோலை இருக்கக்கூடிய ரூ.9 லட்சத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடினர். அதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஜிகேந்தர் என்பவரை கைது செய்தனர். பிறகு சென்னை அழைத்த வந்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து கைதான கொள்ளையன் ஜிகேந்தரை விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.