Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

By VASUKI
29 Jan 2025, 11:15 AM
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதை அடித்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் வாக்காளர்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈ.வெ.ரா மரணத்தை தொடர்ந்து 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும், மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும் ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைத்ததாகக் கூறியுள்ளார்.

கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், வாக்குக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், அதனாலேயே அந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது நடக்க உள்ள தேர்தலில் கொட்டகை பாணி பின்பற்றக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ள மனுதாரர், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாக கூறியுள்ளார். தனது விண்ணப்பத்தில், தொகுதிக்கு வரும் வெளியாடகளுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ - பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன் லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8 ஆம் தேதி அளித்த தனது விண்ணப்பத்துக்கு பதிலளிக்கவில்லை என்பதால், அதனை பரிசீலிக்கும் படி  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்... யார் தான் சலுகைகள் வழங்கவில்லை எனத் தெரிவித்து, மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது