Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பேருந்து டயருக்கு அடியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

By nagalekshmi
01 Jan 2025, 02:37 PM
சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தி.நகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் மாநகர பேருந்து (எம் 27) நேற்று இரவு தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் மீது அந்த பேருந்து மோதியது. அதில் மூதாட்டி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மூதாட்டியின் உடல் பேருந்தின் டயருக்கு அடியில் சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மூதாட்டின் உடலை மீட்க போலீஸார் நீண்ட நேரம் போராடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி மூதாட்டியின் உடலை மீட்டனர்.

பின்னர் மூதாட்டின் உடல் பிரேத பரிசோதனைக்காக  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து  மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி  சென்னை பள்ளிக்கரணை எம்ஜிஆர் நகரை சேர்ந்த 60 வயதுடைய ரமணி என்பதும் அவர் சொந்த வேலை காரணமாக தி. நகருக்கு வந்தார் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து, வேலையை முடித்துவிட்டு தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த போது பேருந்தின் முன்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுனர் தனசீலன் என்பவரை மாம்பலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.