Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வயநாட்டில் போல சென்னையிலும்.. ட்ரோன்களை பறக்கவிட்டு பைலட்டுகள் ஒத்திகை

By leninakathiya
16 Oct 2024, 08:44 PM
வயநாடு நிலச்சரிவின் போது ட்ரோன் மூலம் உணவு, மருந்து வழங்கியது போல, சென்னையிலும் வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில், ட்ரோன் பறக்க விட்டு பைலட்கள் ஒத்திகை பார்த்தனர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதனை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வானப் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை அதிநவீன நீரிறைக்கும் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது தமிழக அரசு. மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளதாகவும், அரக்கோணம் கப்பல் படை வீரர்கள், மத்திய கடலோர காவல் படையினரும் படகுகளுடன் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையில் பட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

மேலும் மீட்பு பணியின் ஒரு பகுதியாக, நிவாரண மையங்கள், உணவுக் கூடங்கள் ஆகியை அமைக்கப்பட்டு. மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கும் பணியையும் கையாண்டது அரசு. வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னையில் மொத்தம் 198 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 28 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிவாரண முகாம்களில் நேற்று மற்றும் இன்று மதியம் வரை உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகங்களில் நூறு சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, அனைத்து நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நிவாரண மையங்களிலும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

மேலும் அதிக கன மழை பெய்யும் நேரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள், உணவுகளை வழங்க மாநகராட்சி சார்பில் 10-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு ஒத்திகை செய்யப்பட்டது.

மழை காலங்களில் பொதுமக்களுக்கு உதவியாக இந்த ட்ரோன்கள் இருக்கும் என்ற ட்ரோன் பைலட்கள் தெரிவித்துள்ளனர். மழை குறைந்ததன் காரணமாகவும், உடனடியாக தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாகவும் ட்ரோன் வைத்து ஒத்திகை நடந்ததாக தெரித்துள்ளனர். இந்த ட்ரோன்கள் மூலம் 10 கிலோ உணவு பொட்டலங்களை பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு எடுத்து செல்ல முடியும் என்று கருடா ஸ்பேஸ் சீனியர் ட்ரோன் பைலட் அகமது அலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செயலில் ஒன்றுமில்லை.. விளம்பரம் தான் அதிகமா இருக்கு.. தமிழிசை சவுந்தரராஜன்

இந்த வகையான ட்ரோன் மூலம் ஏற்கனவே இயற்கை பேரிடர்களின் போது பயன்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக வயநாடு நிலச்சரிவு, புனே மழை வெள்ளம் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராணுவத்திலும் கூட ட்ரோன் மூலம் மருந்து, உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. 3 கிமீ வரை இயங்கும் வகையிலான ட்ரோன்கள் இவை. இயற்கை பேரிடர் நேரங்களில் இந்த ட்ரோன் மக்களின் உற்றத்தோழனாக இருப்பதாகவும், 10 கிலோ பண்டல்கள் தூக்கிச் செல்லும் வகையில் இந்த ட்ரோன்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ட்ரோன் பைலட் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு ட்ரோன் மூலம் அத்தியாவசிய பொருட்கள், உணவு மற்றும் மருந்துகள் கொடுப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார். உணவு தேவைகள், மருந்து தேவை படும் பகுதி மக்களின் பட்டியலை எடுத்து அங்கு விரைந்து ட்ரோன் மூலம் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.