சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் இடையே நேற்று இரவு பிரியாணி சாப்பிடுவதில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அக்காள்- தங்கை சண்டை பெரிதாகவே தயார் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் கோபமடைந்த தங்கை தனது அக்காவின் செல்போன் உடைத்ததாக தெரிகிறது. இதனால் தாயார் அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தங்கை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் அவருக்கு தலை மற்றும் முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளதாலும், மூக்கிலிருந்து ரத்தம் வந்துள்ளதாலும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதாரண பிரச்சனைகளுக்கே தற்கொலை செய்துகொள்கிறார்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).