தமிழ்நாடு

நடுங்க வைக்கும் காட்சிகள்.. அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியானது!

By MUTHUKRISHNAN
01 Jul 2025, 06:32 PM
தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நபர் காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை திருடியதாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதால் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழக அரசியலால் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது நேற்றைய தினம் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.உயிரிழந்த அஜித்குமார் உடலானது பிரேத பரிசோனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற உடற்கூறு ஆய்வின் அறிக்கையானது வெளியானது. அதில் அஜித் குமாரரின் உடலில் 18 இடங்களில் தாக்கப்படதற்கான அறிகுறி உள்ளது. குரல்வளையில் காயம் ஏற்பட்டுள்ளது. உள்உறுப்புகள் சேதம் அடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.




இதைத்தொடர்ந்து திருபுவனம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழப்புக்கு காரணமான ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையத்திலிருந்து வேனில் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பு நேரில் ஆஜர் செய்தனர். ஐந்து பேரையும் 15 நாள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பார்ப்போரை நடுங்க வைக்கும் வகையில் அதன் காட்சிகள் உள்ளது. இந்நிலையில் சிவகங்கை லாக்-அப் மரணம் தொடர்பாக, சிவகங்கை போலீஸ் எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்பியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.