Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மனைவியைக் கொலை செய்து பேட்டிக் கொடுக்கச் சென்ற CRPF வீரர்.. சென்னையில் அதிரடியாக கைது!

By VASUKI
02 Aug 2025, 09:13 PM
மனைவியைக் கொலை செய்துவிட்டு சென்னைக்குத் தப்பி ஓடி வந்த சி.ஆர்.பி.எப்-வீரர், சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குப் பேட்டி கொடுக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தாளவாய்புரத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்) வீரரான இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தமிழ்ச்செல்வனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இரவு, உமா மகேஸ்வரி குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வன் அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த உமா மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தமிழ்ச்செல்வன் குழந்தைகளை எழுப்பி, அவர்களை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தக் கொலைகுறித்துத் தகவலறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தமிழ்ச்செல்வன் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தமிழ்ச்செல்வனைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த தமிழ்ச்செல்வன், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குச் சென்று, தான் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகவும், இதுகுறித்துப் பேட்டி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தொலைக்காட்சி ஊழியர்கள் உடனடியாகத் தேனாம்பேட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தமிழ்ச்செல்வனைக் கைது செய்து, தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.