Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரிப்பு.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

By nagalekshmi
02 Jan 2025, 02:51 PM
ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்கரப் டைபஸ் என்ற ஒரு வகையான பாக்டீரியா தொற்று ரிக் கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் ஆகியவை மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு ஸ்கரப் டைபஸ் நோய் ஏற்படுகிறது. இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படும்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் பரவல் இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணிகள் பெண்கள் போன்றோர் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.,

மேலும், ஸ்கரப் டைபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும் என்றும்  அதன் பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலோ இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டாலோ, ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். 

தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என பொது சுகாதரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.