Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By nagalekshmi
02 Jan 2025, 05:02 PM
சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு  விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை  தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள்  குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் எஸ்.வி.சேகர் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் புகாரளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவினர்,   இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி, எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

தீர்பு வழக்கப்பட்ட பின் அபராத தொகையை செலுத்தி எஸ்.வி.சேகர் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனால் அந்த தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நடிகர் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்து  உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில் வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.வேல்முருகன், நடிகர் எஸ்.வி். சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து  மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மேல் முறையீடு செல்ல இருப்பதால் தீர்ப்பை நிறுத்திவைக்க கோரி எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், 90 நாட்கள் தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.