Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னை ஈசிஆர் சம்பவம்... பெண்களை துரத்திய கும்பல்... முக்கிய குற்றவாளி கைது...

By Kalandhai
01 Feb 2025, 11:08 AM
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஈசிஆர் சாலையில், கடந்த 25ம் தேதி இரவு நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. முட்டுக்காடு பகுதிக்கு தங்களது குடும்பத்தினருடன் காரில் சென்ற பெண்களை, இரண்டு கார்களில் பயணித்த இளைஞர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக அந்த காரிகளில் ஒன்றில், திமுக கொடி இருந்ததும் பெரும் சர்ச்சையானது. இதனை குறிப்பிட்டு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் திமுக கொடி கட்டிய வெள்ளை நிற சஃபாரி கார், கன்னியாகுமரியைச் சேர்ந்தது என்றும், மற்றொரு கார் நங்கநல்லூரைச் சேர்ந்தது எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார், வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். அவர்கள் 4 பேரையும் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சந்துருவை, வெளி மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.