தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா போதைப்பொருள்கள் விற்கப்படுவது தொடர்பான வழக்கை டெல்லி சிபிஐ காவல்துறை விசாரித்து வருகின்றது.
இதில் மாதவராவ், சீனிவாசராவ் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ இவர்களுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி , சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகளுக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில் ஏற்கனவே உள்ள ஆறு பேருடன் கூடுதல் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் பெயர்களும் குற்றபத்திரிகையில் சேர்க்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கட ரமணா, டாக்டர். சி.விஜய்பாஸ்கர், ஏ.சரவணன் ( சி.விஜயபாஸ்கர் தனி உதவியாளர்) சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வி.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி, கே.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் என்பவர் மரணம் அடைந்து விட்டதால் அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிபிஐ தரப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் இறுதி அறிக்கையை (கூடுதல் குற்றபத்திரிகை) காகித வடிவிலும், 492 ஆவணங்கள் பென்-ரைவ் மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் , பெரு நகர சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகி குற்றபத்திரிகை நகல் பெற்றுக் கொண்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பென்-ரைவ் மூலம் வழங்கியதால் பல ஆவணங்கள் இல்லை. குறிப்பாக விசாரணையின் போது கைபற்றிய மொபைல் போன், லேப்டாப் என உள்ளது. அதில் இந்த வழக்கில் என்ன ஆவணங்கள் உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் இல்லை.
இதேபோல் இன்டெக்ஸ் அளித்த விபரங்கள் படி ஆவணங்கள் இல்லை. இதனை வைத்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்வது கடினம் என தெரிவித்தனர். இதற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார். அப்போது நீதிபதி நீங்கள் அளித்த பென்-ரைவ் குறைபாடு உள்ளது என்று எதிர் தரப்பில் கூறினால் அதற்கு நீங்கள் தான் பதில் அளிக்க வேண்டும். மனு தாக்கல் என்பது தேவையில்லை என தெரிவித்தார்.
பென்-ரைவில் விடுபட்ட மற்றும் தகவல்கள் முழுமையாக இல்லாதது குறித்து சிபிஐ தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.