தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் - அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

By Jayakumar
21 Sep 2025, 12:42 PM
பயன்படுத்த தகுதியற்ற வணிக வளாகக் கடையினை இடிக்கச்சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடையை ஏலம் எடுத்து நடத்தி வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராமசாமி பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தாமல் தொடர்ந்து கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்

அவர் நடத்தி வந்த கடை கட்டிடம் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளதால் வணிக வளாக கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட மூன்று கடைகளை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் கருணாம்பாள் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் இடிக்க சென்றபோது ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வணிக வளாக கட்டிடத்தை இடிக்க விடாமல் தடுத்தனர்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களை தகாத வார்த்தையில் பேசியதோடு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கும்பல் நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஆணையாளருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதிமுக பிரமுகர் தலைமறைவு

இதற்கிடையே தூய்மை பணியாளர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் கருணாம்பாள் தூய்மை பணியாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து ராமசாமி மற்றும் அவர்கள் தரப்பை சார்ந்தவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், தூய்மை பணியாளர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ராமசாமி தரப்பினர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.