Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு- காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

By Jayakumar
05 May 2025, 05:03 PM
யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு

தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக்கோரி யூடியூபர் டிடிஎஃப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கடந்த 2023ம் ஆண்டு பாஸ்போர்ட் கோரி கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில், நான் ஓட்டி சென்ற பைக் காஞ்சிபுரம் அருகே விபத்துக்குள்ளானது.பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டதோடு, தன்னுடைய ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

இதன்பின் தன்னுடைய பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் நிலுவையில் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தன்னுடைய பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது உரிய காலத்திற்குள் முடிவெடுத்து பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

காவல்துறைக்கு உத்தரவு

இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, டிடிஎஃப் வாசன் தரப்பில், மருத்துவ சிகிச்சைக்காகவும், திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளாகவும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் டிடிஎஃப் வாசன் மீது தமிழகத்தில் அதிவேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக 4 வழக்குகள் உள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திலும் அவர் மீது வழக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதைப்பதிவு செய்த நீதிபதி, டிடிஎஃப் மீது காவல்துறை இதுவரை பதிவு செய்துள்ள அனைத்து வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.