Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

திருமணத்தை மீறிய உறவால் கொடூரம் - கணவனை கொலை செய்த காதலன்

By leninakathiya
04 Nov 2024, 10:01 AM
பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த  கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி அசோக்குமார் என்ற வேலவன் (37). இவரது மனைவி சுகன்யா (33) இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு மணிகண்டன் (13), ரஞ்சித் (10), அர்ஷத் (7), ஆகிய 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

வேலவன் பெங்களுரில் சென்ட்ரிங் வேலை செய்து வருவதால் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார். இதனிடையே வேலவன் மனைவி சுகன்யாவிற்க்கும், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சத்யமூர்த்தி (27), என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதை அறிந்து கொண்ட சுகன்யாவின் கணவர் வேலவன் மனைவி மற்றும் சத்யமூர்த்தியை கண்டித்துள்ளார். இருப்பினும் சத்தியமூர்த்தியின் தொடர்பை சுகன்யா கைவிட மறுத்து தொடர்ந்து இருவரும் பழகி வந்துள்ளனர். இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட சுகன்யா தனது குழந்தைகளுடன் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார், கணவர் வேலனும் பெங்களுரில் இருந்து மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி இரவு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராமத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி காண்பதற்காக தனது மனைவி குழந்தைகளுடன் சென்றுள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த வேலனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டிய சத்யமூர்த்தி வேலனை பின் தொடர்ந்து பிக்கனஅள்ளிக்கு சென்றுள்ளார்.

நடன நிகழ்ச்சியில் இருந்த வேலனை முக்கியமான விஷயம் பேச வேண்டும் என செல்போன் மூலம் சத்யமூர்த்தி அழைத்துள்ளார். அதனை நம்பி வேலவன், தனியாக அருகில் உள்ள மாந்தோப்பிற்கு சென்றுள்ளார். அப்போது சத்யமூர்த்தி ஏற்கனவே தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

இதுகுறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வேலனின் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான சத்யமூர்த்தியை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த கள்ளக் காதலியின் கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.