தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசில் பாஜகவினர் புகார்

By Jayakumar
15 Jul 2025, 04:07 PM
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கமலாலயத்திற்கு வந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நாட்டு வெடிகுண்டு மிரட்டல் விட்டு கடிதம் ஒன்று எச்.ராஜா பெயருக்கு வந்துள்ளது. அதனை பிரித்துப் படிக்கும் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டலும் இதே நிலைமை அண்ணாமலை மற்றும் எச்.ராஜாவிற்கும் ஏற்படும் என்று எழுதப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்

இது தொடர்பாக வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பாஜக வழக்கறிஞர் அணியின் சார்பில் எழில்மாறன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் அணியின் முன்னாள் மாநில தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. செஞ்சயைச் சேர்ந்த எழில் மாறன் என்பவர் கமலாலயத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் தமிழகத்திற்கு எப்போது வந்தாலும் என்னுடைய தலைமையில் அவர் மீது நாட்டு வெடிகுண்டு போடப்படும் என்று எழுதி உள்ளார்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இதில் அண்ணாமலை எச்.ராஜா உள்ளிட்டோருக்கும் இதே நிலைதான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் எச்.ராஜா பெயருக்கு பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்துள்ளது. இன்னும் பத்து தினங்களில் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார். அவருக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் கடிதம் எழுதி அனுப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்” என கூறினார்.