தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

By VASUKI
17 Sep 2025, 08:25 PM
சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிஜிபி அலுவலகத்திற்கு வந்த ஒரு இமெயிலில், “ஆளுநர் மாளிகை மற்றும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும்” என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்தத் திடுக்கிடும் தகவலால், காவல்துறை வட்டாரம் அதிர்ச்சியடைந்தது.

மிரட்டல் விடுத்த இமெயில் கிடைத்த உடனேயே, போலீசார் அவசரமாகச் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். ஆளுநர் மாளிகை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், எந்தவித வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை.

அதிகாரிகளின் விசாரணையில், வந்த மிரட்டல் ஒரு புரளி என்பது உறுதியானது. இந்த மிரட்டல் காரணமாக, இரண்டு முக்கிய இடங்களிலும் பெரும் பதற்றம் நிலவி, பின்னர் தணிந்தது. மிரட்டல் இமெயிலை அனுப்பிய நபர் குறித்து, சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.