தமிழ்நாடு

நடுரோட்டில் காவலர் மீது தாக்குதல்... திமுக பிரமுகர்களால் பரபரப்பு

By Jayakumar
15 Apr 2025, 06:46 AM
மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
காவலர் மீது தாக்குதல்

அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் இருக்கக்கூடிய 177வது வார்டு பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்நிலையில் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனை சீர் செய்வதற்காக வேளச்சேரி காவலர் காமராஜர் என்பவர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

கவுன்சிலர் சமாதானம்

உடனடியாக காவலர் காமராஜ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த உடன் போலீசார் வந்தவுடன் கவுன்சிலர் அவர்களை சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடுரோட்டில் காவலரை தாக்கிய திமுக நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசாரும் திரும்பி சென்றனர். காவலரிடம் திமுக பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.