தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல் துறை பொய் வழக்கு போடுகிறார்கள்- வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு

By Jayakumar
11 Aug 2025, 05:32 PM
திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு
வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் முருகன். தனது மனைவி சுகந்தியுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார்.

என் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வியாசர்பாடி காவல் நிலையத்தில் தன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. தான் ரவுடி நாகேந்திரனின் தம்பி. என்மீது காவல்துறையினர் நான் நாகேந்திரன் தம்பி என்பதால் வழக்குகளை போட்டார்கள்.

என் வீட்டில் எந்த சோதனையும் நடத்தவில்லை. நாகேந்திரன் வீட்டில் தான் ஆயுதங்கள் சிக்கியது.அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

என் மீது பொய் வழக்கு போடப்படுகிறது

என் மீது எந்த ஒரு கொலை வழக்கும் நிலுவையில் இல்லை. நான் கடந்த பத்து வருட காலமாக எந்த குற்ற செயலிலும் ஈடுபடாமல், என் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் நான் நாகேந்திரன் அவருடைய தம்பி என்பதால் என் மீது பொய் வழக்கு போடப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 2025ல் என் மீது பொய் வழக்கு போடப்பட்டு நான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டேன். இனியும் நான் எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுபடவும் மாட்டேன். ஆகவே காவல் துறையினர் என்னை கூட்டிச்சென்று பொய் வழக்குபோடாமல் இருக்கவும் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தன்னிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்” என்று தெரிவித்தார்.