Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நீங்க மனுஷங்களா இல்ல...எமனுங்களா?"- இளைஞர் லாக்கப் மரணத்தால் தாடி பாலாஜி கொத்தளிப்பு

By Jayakumar
01 Jul 2025, 02:50 PM
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை திருடியதாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இளைஞர் உயிரிழப்பு

திருப்புவனம் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியானது. இதில் அஜித்குமார் 9 இடங்களில் தாக்கப்பட்டதும் குரல்வளையில் காயம் ஏற்பட்டது. உள் உறுப்புகள் சேதம் அடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதாக அறிக்கை வெளியானது.

இதைத்தொடர்ந்து திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழப்புக்கு காரணமான ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையத்திலிருந்து வேனில் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பு நேரில் ஆஜர் செய்தனர். ஐந்து பேரையும் 15 நாள் நீதிமன்றக்காவலில் கிடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

காக்கி சட்டை போட்ட எமனுங்களா?

இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி இந்த சம்பவம் குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். அதில் "நீங்க மனுஷங்களா இல்ல காக்கி சட்டை போட்ட எமனுங்களா?" என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று, இப்படி கொன்று விடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சட்டத்தை கையில் எடுத்து நீங்களே நீதிபதியாக செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்?" என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

தண்டிக்க வேண்டும்

மேலும் இந்த லாக்கப் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் நடிகர் தாடி பாலாஜி வலியுறுத்தியுள்ளார். மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.