தமிழ்நாடு

திருவண்ணாமலை கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து!

By VASUKI
30 Apr 2025, 03:00 PM
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக, ஜீவானந்தம் என்பவரை நியமித்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து திருவண்ணாமலையைச்சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் பக்தர்கள், பொது மக்கள் தரப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டும், ஜூவனாந்தத்தை அறங்காவலர் குழு தலைவராக நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்து அறநிலைய சட்டப்படி கோவில் நிர்வாகத்துக்காக முதலில் அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட வேண்டும், அதன்பின், அறங்காவலர்களில் இருந்து தலைவரை நியமிக்க வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் பின்னணி உடைய 5 பேரை, அறங்காவலர்களாகவும் நியமித்துள்ளது சட்டவிரோதமானது என்றும், கோவில் அறக்கட்டளை சொத்தில், வாடகைதாரராக ஜீவானந்தம் இருப்பதால் அதில் ஆதாயம் அடைய வாய்ப்பிருப்பதால், அவரை நீக்க வேண்டும், அறங்காவலர்கள் குழு தலைவர் பதவியை ஜீவானந்தம் வகிக்க, தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.