Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்... போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு வலிப்பு!

By VASUKI
22 Jan 2025, 11:21 AM
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை காவல்துறையில் போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து  சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதல் நாள் இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தனியாக தான் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றாரா? வேறு யாரேனும் உடன் வந்தார்களா? வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது செல்போனில் உள்ள வீடியோக்கள் குறித்து போலீசார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முழுவதும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி துணை ஆணையர் சினேகா பிரியா தலைமையில் போலீசார் அதிரடியாக விசாரணை   மேற்கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும் வீடியோ காட்சிகள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டார். 

அங்கு  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சைக்கு பின்னர் கைதிகள் வார்ட்டில் அனுமதிக்கப்படுவாரா?? அல்லது மீண்டும் சிறப்பு புலனாய் குழு போலீசரிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பதை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.