Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அதிவேக பயணம்.. பரிதாபமாக பறிப்போன இளைஞர் உயிர்

By nagalekshmi
25 Dec 2024, 10:01 AM
சென்னை  சைதாப்பேட்டை ஆடுதொட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

சென்னை கிண்டி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு  பன்னோக்கு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சைதாப்பேட்டையை இணைக்கக்கூடிய ஆடு தொட்டி மேம்பாலத்தில் கிண்டி தொழிற்பேட்டையில் இருந்து அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் இருவர் பயணம் செய்தவாறு இன்று (டிசம்பர் 25) அதிகாலை சென்றுள்ளனர்.

அப்பொழுது இரு சக்கர வாகனம் அதிவேகமாக இயக்கப்பட்டதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்து பக்கவாட்டு சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து வந்த இளைஞர் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதேபோல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து பலத்த காயம் அடைந்த இளைஞரை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் உயிரிழந்தவர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 24 வயதான தீனதயாளன் என்பது தெரிய வந்தது. 

இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து வந்த இளைஞர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதான விஜய்  என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.