தமிழ்நாடு

வீடு புகுந்த ரவுடி கும்பல்: கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி வெட்டு- மூன்று பேர் கைது!

By Christon
17 Sep 2025, 02:09 PM
முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ரவுடி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழி வர்மன். இவரது நண்பரான அபினேஷ், படப்பையில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி அருள்மொழி வர்மன் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு, அபினேஷ் அயனாவரம் வீராசாமி தெரு அருகே தனியாக நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி சிலம்பரசன், சூர்யா மற்றும் சைல்ட் ஆகிய மூவரும் அபினேஷிடம் "நீ யார்? ஏன் இங்கு இருக்கிறாய்?" என்று கேட்டு அவரைத் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த அருள்மொழி வர்மன், அவர்களை தடுத்து "அபினேஷ் என் வீட்டில் தான் தங்கி இருக்கிறான்" எனக் கூறி அபினேஷை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கத்தியுடன் தாக்குதல்

இந்த ஆத்திரத்தில், நேற்று இரவு முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த சிலம்பரசன், சூர்யா, சைல்ட் மற்றும் சில ரவுடிகள், கத்தியுடன் அருள்மொழி வர்மன் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைய முயன்ற ரவுடிகளை அருள்மொழி வர்மன் தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அருள்மொழி வர்மனை வெட்டிவிட்டு வீட்டிற்குள் புகுந்து, அபினேஷ் மற்றும் அவர்களது நண்பர் அப்துல்லா ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அருள்மொழி வர்மன், அபினேஷ், மற்றும் அப்துல்லா ஆகிய மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை நடவடிக்கை

சம்பவம் குறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீசார், உடனடியாக விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி சிலம்பரசன், சூர்யா, மற்றும் சைல்ட் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.