Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

திடீரென உடைகளை களைந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

By Kumudam News
23 Nov 2024, 05:11 AM
சாலையில் திடீரென ஆடைகளை களைந்து போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணாசாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்தராஜ். இவர்  அண்ணா சாலை சுமித் சாலை வளைவு பகுதியில் இன்று காலை பணியில் இருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் மாநகர பேருந்திற்கு வழி விடாமல் நின்றிருந்தார். 

உடனே போக்குவரத்து காவலர் ஆனந்த்ராஜ், பைக்கில் வந்தவரை ஓரமாக செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் போலீசுடன் தகராறில் ஈடுபட்டதுடன் திடீரென பேண்ட்- சட்டையை கழற்றி வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்நபர்  திடீரென போலீசாரின் காலில் விழுந்து தன்னை தாக்கும் படி மனநலம் பாதித்தவர் போல தகராறு செய்தார். இதனால் கடுப்பான போலீசார் அந்நபரை குண்டுக்கட்டாக தூக்கி சாலையோரமாக வைத்தனர். அப்போது போக்குவரத்து போலீசார் ஒருவர் பூட்ஸ் காலால் அந்த நபரை எட்டி உதைத்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  அண்ணாசாலை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சண்முக ராஜ் என்பதும் எழும்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் மனநலம் பாதித்தவர் போல் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அந்நபர் கடந்த நான்கு நாட்களாக மாத்திரை ஏதும் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததாகவும் அதனால் தான் இவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.