Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

எங்கடா இங்க இருந்த ஆடு? ரூ.7 லட்சம் மதிப்பிலான 68 ஆடுகள் திடீர் மாயம்

By MUTHUKRISHNAN
18 Apr 2025, 08:00 PM
குன்னம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பிலான 68 ஆடுகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்குட்பட்ட வடக்கலூர் ஊராட்சி கத்தாழை மேடு கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா -செல்வி தம்பதியினர் 58 செம்மறி ஆடுகள்,10 வெள்ளாடுகள் என மொத்தம் 68 ஆடுகளை தங்களுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பு வலைகள் அமைத்து வளர்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் 12 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் இருவரும் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு 7 மணியளவில் ஆடுகளை பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 9:30 மணியளவில் ஆடுகள் அடைக்கப்பட்ட இடத்திற்கு இருவரும் சென்று பார்த்த போது அவ்விடத்தில் ஒரு ஆடுகள் கூட இல்லாமல் மாயமனாதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் உள்ள பல இடங்களுக்கு சென்று தேடியும் உள்ளனர். இருப்பினும் ஒரு ஆடு கூட எங்கும் கிடைக்கவில்லை

காலை வரை ஆடுகள் திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த கருப்பையா மற்றும் செல்வி, ஆடுகள் திருடு போய் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மங்களமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் மாயமான ஆடுகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணமால் போன ஆடுகளின் மதிப்பு சுமார் 7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.கருப்பையா செல்வி தம்பதியினரின் 68 ஆடுகள் மாயமான சம்பவம் குன்னம் வட்டாரம் இன்றி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் மாயக்கிருஷ்ணன் என்பவரின் 25 ஆடுகளை திருடிச் சென்ற 2 பேரை பாடாலூர் போலீசார் கைது செய்து ஆடுகளை மீட்டது குறிப்பிடதக்கதாகும்.

Read more: கந்து வட்டியுடன் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்- அமமுக முக்கிய பிரமுகர் கைது