Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

48வது சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்..!

By VASUKI
27 Dec 2024, 08:41 PM
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 48வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 48 வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது. இந்த புத்தகக் காட்சியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியர் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

 இலக்கியம் ஆன்மீகம் வாழ்வியல் கலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் குமுதம் அரங்கில் புத்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த ஆண்டு குமுதம் பதிப்பகம் சார்பில் 5 புதிய புத்தகங்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் எழுதிய சமைக்கலாம் வாங்க பாகம் -1 புத்தகம் வெளியாகி உள்ளது. அதேபோன்று தாழங்குடை என்கிற தலைப்பில் பெண்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வை  சொல்லும் 10  பெண் எழுத்தாளர்களின் எழுத்து வடிவத்தில் புத்தகம் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் நந்தன் மாசிலாமணி குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வாசகர்களின் பேர் ஆதரவை பெற்ற உளவுக்கு ஆயிரம் கண்கள் புத்தக வடிவில் வெளியாகி உள்ளது. ஈசன் வீட்டிற்குள் ஒரு பயணம் எனும்  தலைப்பில் எழுத்தாளர் ராஜ சியாமளா பிராகாஷ்  அமலா பிரகாஷ் எழுதியுள்ள புத்தகம், பாசிலா பிரசாத் எழுதியுள்ள மனசே மகிழ்ச்சி பழகு எனும் வாழ்வியல் சார்ந்த புத்தகம் இந்த ஆண்டு குமுதம் பதிப்பகம் சார்பில் புதிதாக வெளியாகி உள்ளது. 

இதைத் தவிர்த்து குமுதம் பதிப்பகத்தின் மிகப் பிரபலமான ஒரு பக்க கதைகள் ராண்டர்கை எழுதிய பிரபலமான கொலை வழக்குகள் எனும் புத்தகம் இடம்பெற்றுள்ளது.  பிரியா கல்யாணராமன் எழுதி கடந்த புத்தக கண்காட்சியில் மக்கள் வரவேற்பை பெற்ற புகழ்பெற்ற தமிழச்சி ஆண்டாள் ஐந்து பாகங்கள் இந்த ஆண்டு பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் குமுதம் அரங்கில் இடம் பெற்றுள்ளது.

48வது புத்தக கண்காட்சி இன்று முதல் 2025 ஜன.12-ம் தேதி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் புத்தக காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் புத்தக கண்காட்சி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். அனைத்து இடங்களிலும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடியுடன் பல்வேறு பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 900 அரங்குகள் இடம்பெற்று உள்ளன.

48வது புத்தகக் காட்சியை இன்று சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.  அரங்கம் 456 மற்றும் 457ல் குமுதம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

புத்தகக் கண்காட்சி மொத்தம் 18 நாட்கள் நடைபெறுகிறது. ஜனவரி 12ம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். அனைத்து அரங்கிலும் 10% சலுகை விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.  ஏரளமான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் புத்தக பிரியர்கள், மாணவர்களுக்கு புத்தகக் கண்காட்சி பயன் உள்ளதாக அமைகிறது. சென்னை புத்தகக் கண்காட்சி பலராலும் விரும்பப் படும் ஒன்றாக உள்ளது.