தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

By VASUKI
27 Sep 2025, 11:50 AM
கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சாலியூர், யாசின் நகர் பகுதியில் தாயும் 13 வயது மகளும் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.

யாசின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாள். கணவரை இழந்த இவர், தனது மகன் பெரியசாமி மற்றும் 13 வயது மகள் யாசிதா ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மகன் பெரியசாமி, வீட்டினுள் தாய் எல்லம்மாள் மற்றும் சகோதரி யாசிதா ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினான். அவனது சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், இந்தக் கொடூரக் கொலைகளைக் கண்டு உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் மற்றும் டி.எஸ்.பி. முரளி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை நேரில் சென்று கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்த மர்ம நபர் யார் என்பது குறித்துக் கைரேகை நிபுணர்களுடன் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளார். இரட்டைக் கொலை ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் பாஞ்சாலியூர் யாசின் நகர் பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.