தமிழ்நாடு

பாதுகாப்பில்லாத ரயில் பயணம்.. பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்

By VASUKI
04 Apr 2025, 06:51 AM
ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் ஆறு சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த முத்து குமாரசுவாமி இவருடைய மனைவி பால சரஸ்வதி இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் கொரட்டூர் செல்வதற்காக திருப்பதி வழியாக மும்பையிலிருந்து இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சத்ரபதி விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்தனர்.

அப்போது ரயிலானது அரக்கோணம் ரயில் நிலையம் ஐந்தாவது நடைமேடையில் வந்து மீண்டும் புறப்பட்டபோது திடீரென 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பால சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த சுமார் ஆறு சவரன் எடை கொண்ட தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

சமீபகாலமாக ரயிலில் தொடரும் குற்றச்சம்பவங்களால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் பொது பெட்டியில் பயணம் செய்யக் கூடிய பயணிகளின் பாதுகாப்பு நிலை என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.