அரசியல்

"விஜய் பா.ஜ.க. பக்கம் சாயவில்லை; சாயவும் மாட்டார்!" - வைகோ பேட்டி...

By Sumalekha
12 Jul 2026, 11:00 AM
விஜய் தலைமையிலான அரசு, பா.ஜ.க., கூட்டணி அரசியல், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது நிலைப்பாடுகளை விரிவாக விளக்கியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி த.வெ.க. கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க களமாடிவருகிறார். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அவரை ஒருநாள் மதியவேளையில் சந்தித்து தமிழகத்தின் நிகழ்கால அரசியல் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் நடந்தவை என்ன?

"ஆதரவு கொடுத்ததற்காகவும், கூட்டணியில் பங்கேற்றதற்காகவும் முதல்வர் நன்றி தெரிவித்தார். கூட்டணியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று எங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் கேட்டறிந்தார். 'இந்த அமைப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம்' என்றார். மற்றபடி, அங்கு நடைபெற்ற வாதங்கள் குறித்தோ, என் தரப்பில் எடுத்துவைத்த கருத்துகள் குறித்தோ வெளிப்படையாகச் சொல்ல இயலாது."

அனிதா ராதாகிருஷ்ணன் கைது, பழிவாங்கும் நடவடிக்கையா, அவரை த.வெ.க.வில் இணையச் சொல்லி வற்புறுத்தினார்களாமே?

“உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். அரசாங்கத்திற்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். அதன் அடிப்படையிலே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம். 'இது பழிவாங்கும் நடவடிக்கை' என அவர் சொல்கிறார் என்றால், தோல்வி அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறார்கள். தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்திக்குச் சென்று மீண்டுகொள்ளலாமே? த.வெ.க.வில் இணையச் சொல்லி நெருக்கடி கொடுத்தார்கள்' என்று அவர் சொல்வது குறித்த கேள்வியை அமைச்சர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்"

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க.வினரே இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளராக களமிறக்கப்படுவார்களா?

அது தெரியாது. ஆனால், இதே அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பதயிலிருந்து வெளியேறி, இடைத்தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டவர்தான். பம்பரம் சின்னத்தில் வென்ற கம்பம் ராமகிருஷ்ணன், ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.வுக்குச் சென்று இடைத்தேர்தலில் போட்டியிட்டவர். இப்படியொரு பாதையை காட்டியதே தி.மு.க.தான்."

'விஜய் ஊழலற்ற ஆட்சி தருகிறார்' என்கிறீர்கள். ஆனால், தொடர்ந்து ஊழல் கறைபடிந்தவர்கள் த.வெ.க.வில் இணைகிறார்களே?

"த.வெ.க. ஆட்சிக்கு முன்புவரை எல்லாத் துறைகளிலும் கமிஷன் இருந்தது. இப்போது, கரப்ஷன் ஃப்ரீ, கமிஷன் ஃப்ரீ, கட்டிங் ஃப்ரீ கவர்ன்மென்ட் நடத்துகிறார் விஜய், இதிலே பெருமைப்படத்தானே வேண்டும். யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். பின்னர் என்ன இடத்தில் அவர்களை வைக்கப்போகிறார்கள் என்பது இப்போது தெரியாது."

இடைத்தேர்தலில், ஸ்டாலினுக்கு எதிராக த.வெ.க. கூட்டணியிலிருந்து நீங்கள் நிற்கவிருப்பதாக சொல்கிறார்களே?

"கற்பனையில்கூட அதை யோசிப்பதற்கு இடமில்லை. எனக்கு தேர்தலில் போட்டியிடுகின்ற எண்ணம் அறவே இல்லை. துரை வைகோவை வைத்து வரும் செய்திகளிலும் உண்மை இல்லை."

கருருக்கு விஜய் செல்கிறாரே. இடைத்தேர்தலுக்கான பிரசாரமா?

"காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது மாதிரிதான். சம்பவம் நிகழ்ந்த போது, அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் விஜய் போகவில்லை. பிறகு அந்த குடும்பங்களுக்கு செய்யவேண்டியதை செய்தார். சந்தித்து ஆறுதல் சொன்னார். இப்போது அவர்களின் வீடுகளுக்கே முதல்வர் செல்வதை நல்ல சமிக்ஞையாகத்தான் நினைக்கிறேன்."

கரூர் சம்பவம் சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும்போது, 'கணக்கை தீர்க்காமல் விடமாட்டோம்' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுவது சரியா?

"அரசு குறித்தோ, அமைச்சர்கள் குறித்தோ எந்த விமர்சனமும் செய்யமாட்டேன். கூட்டணியில் இருந்துகொண்டு விமர்சிப்பது தகாது என்றுதான் தி.மு.க. கூட்டணியில் அமைதியாக இருந்தேன். இந்தக் கூட்டணியிலும் நான் அப்படித்தான்."

பா.ஜ.க. எதிர்ப்பில் இருந்து த.வெ.க. பின்வாங்குவதாக வரும் விமர்சனங்கள் பற்றி?


பின்வாங்கவில்லை. "த.வெ.க. அப்படி மதச்சார்பின்மை, சமூகநீதி, இருமொழிக் கொள்கை, கூட்டாட்சி தத்துவம், ஊழல் இல்லாத அரசு ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே விஜய் இயங்குகிறார். பா.ஜ.க. என்ற வார்த்தை விஜய் வாயிலிருந்து வரவேண்டிய அவசியம் இல்லையே. 'ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம்' என்று பா.ஜ.க. புல்டோசர் அரசியலைக்கொண்டு தேசிய இனங்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகிறதே... அப்படிப்பட்ட அரசியலை விஜய் ஆதரிக்கவில்லையே விஜய் கவனமாக அடியெடுத்துவைக்கிறார். அவர் பா.ஜ.க பக்கம் சாயவில்லை, சாயவும் மாட்டார்"

'அ.தி.மு.க.வை பா.ஜ.க. விழுங்குகிறது' என்ற விமர்சனம், தற்போது அ.தி.மு.க.வினரை த.வெ.க. வளைக்கும்போது ஏன் எழவில்லை?


அ.தி.மு.க.வை த.வெ.க. விழுங்கவில்லையே! அ.தி.மு.க.விலிருந்து தாமாக விலகி த.வெ.க.வில் சேருகிறார்கள். ஆக்டோபஸ்போல இந்துத்துவா சக்திகளை வைத்து பா.ஜ.க. பல மாநிலங்களில் கபளீகரம் பண்ணுகிறதே. அந்த மாதிரி சிறு முயற்சி களில்கூட விஜய் ஈடுபடவில்லை."

ஆளுநரின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"இந்த மாநிலத்தின் சுயாட்சிக்கும் உரிமைகளுக்கும் ஆளுநர்தான் நம்பர் ஒன் வில்லன். தற்போதைய ஆளுநர், முந்தைய ஆளுநரைவிட மோசமானவர். மத்திய அரசாங்கத்தின் ஏஜெண்ட், எடுபிடியாக இருக்கும் ஆளுநர், 'திட்டங்களை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் நானே நிறை வேற்றுவேன்' என்று போட்டி சர்க்கார் நடத்துகிறீர்களா? ஆளுநரிடம் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் மிஸ்டர் விஜய்"

பத்திரிகையாளர்களிடம் அடிக்கடி கோபப்படுகிறீர்களே...

பத்திரிகையாளர்கள் மத்தியில் என்னைப் பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் பத்திரிகைகள் மூலம் திட்டமிட்டு என்மீதும், என் மகன்மீதும் அவதூறுகளைப் பரப்பிவருகிறார்கள். ஒருவர் மட்டும் திரும்பத் திரும்ப புண்படுத்தும் நோக்கோடு கேள்வி கேட்டதால்தான், 'நீங்கள் எந்த பத்திரிகை?" என்று கேட்டேன். பத்திரிகையாளர்களுக்கு எதிராக பொடா சட்டம் வந்தபோது வாஜ்பாய், அத்வானியிடம் வாதாடி தடுத்தவனே நான்தான்."

ம.தி.மு.க. இனி ஒரு கூட்டணிக் கட்சிதானா, தனித்து எப்போது ஆட்சி அமைப்பீர்கள்?

"எந்த காலத்திலேயும் 'நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்' என்று சொன்னது கிடையாது. தமிழ்நாட்டின் பெரிய பதவியைப்பற்றி நான் கனவு கண்டதுகூட கிடையாது. கூட்டணியில் இருப்பதால், அந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறவேண்டும் என்று கடுமையாகப் பாடுபடுவேன்: