Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன்.. திருமாவளவன் புகழாரம்

By Christon
18 Jul 2025, 06:46 AM
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்கவுள்ள நிலையில், சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திமுகவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக, தலைவர் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார். வரும் ஜூலை 25 ஆம் தேதி அவர் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கவுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து, திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒருமணிநேரம் கரைந்ததே தெரியவில்லை. கட்சி அரசியல் கலப்பில்லாத கருத்துப்பொழிவு. ஒரு சொல்லும் வீண் இல்லை.

சாதியே எதிரி. சாதியைக் காக்கும் சனாதனக் கருத்தியலே பகை. அதனை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல். தேர்தல் களத்தில் வெல்வது வெற்றியுமல்ல; தோற்பது தோல்வியுமல்ல!

திராவிடம் தென்னாட்டுக்கு மட்டுமோ; ஓரிரு கட்சிகளுக்கு மட்டுமோ உரியதல்ல; அது தேசம் தழுவியது. அயோத்திதாசப் பண்டிதர் முன்மொழிந்தது.

நாளும் பொழுதும் இடையறாது நாட்டைப் உலுக்கும் மூன்று பரிசுத்த ஆவிகள். அவை, உடுக்கை அடித்து எவராலும் குடுவைக்குள் அடைக்கமுடியாத அறிவுப்பிசாசுகள். காந்தி, அம்பேத்கர், நேரு ஆகிய அம்மூவரும் தான் பழமைவாதம் தகர்க்கும் கருத்தியல் பேரிடிகள். புதுமை இந்தியாவைப் படைக்கும் ஞானச்சிற்பிகள். அவர்களைச் சிதைக்க முனைவது சிறுபிள்ளை விளையாட்டு!

இன்று அரசமைப்புச் சட்டம்தான் நாம் ஏந்த வேண்டிய ஓராயுதம்; பேராயுதம்! இப்படி நீண்டது அண்ணன் கமல்ஹாசனின் கருத்தாடல். தெளிந்த பார்வை! தேர்ந்த இலக்கு! சிலிர்ப்பைத் தந்தது! சிலாகிக்க வைத்தது!

யாவற்றுக்கும் மேலாக, "ஆடைகொண்டு போர்த்த வேண்டாம்; உடலைக் கொண்டு போர்த்துங்கள்" என்று சொல்லிக்கொண்டே என்னை ஆரத்தழுவி அணைத்துக்கொண்ட அவரின் பெருமூச்சில் அன்பின் கதகதப்பை உணர முடிந்தது. உள்ளம் முழுதாய் உறைந்து நின்றது.

இடைவெளி இல்லாது இறுக அணைப்பதில் தானே சகோதரத்துவம் துளிர்விடும்! சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று உணர்வு பூர்வமாக அவர் பதிவிட்டுள்ளார்.