Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை- சீமான்

By Christon
02 Oct 2025, 05:40 PM
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட காணொலி, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பதையே காடவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட காணொலி, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பதையே காட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

'இதயத்தில் வலியோ, காயமோ இல்லை'

விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும், இதற்குக் காரணம் யார் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்றும், திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார் என்றும், இது நல்ல அணுகுமுறை இல்லை என்றும் சீமான் குற்றம் சாட்டினார். மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு என்றும், மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா என்றும் சீமான் வினவினார்.

'கத்திக் குத்துக் காயம் இல்லை'

கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று தகவல் பரவிய நிலையில், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக்கூட கத்திக் குத்துக் காயம் இல்லாதது எப்படி? என்றும், நானே நேரில் சென்று பார்த்தபோது, கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்குக்கூட கத்திக் குத்துக் காயம் இல்லை என்றும் அவர் கூறினார்.

'முதல்வர் நாற்காலிக்கு மரியாதை'

வீடியோவில் பேசும்போது அவர் வலியை கடத்தி இருக்க வேண்டும், ஆனால் அவர் கடத்தவில்லை என்று சீமான் தெரிவித்தார். மேலும், விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், முதலமைச்சரை 'சி.எம். சார்' என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாகப் பேசுவதுபோல் இருக்கிறது என்று விமர்சித்தார். முதல்வர் மேல் அவருக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம் என்றும், ஆனால் அவர் இருக்கும் நாற்காலி பல தலைவர்கள் இருந்த இடம் என்றும் கூறி, முதல்வர் நாற்காலியின் மரியாதையை விஜய் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.