Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

Senthil Balaji : ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்தது.. மக்கள் சிரிக்கிறார்கள்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி

By leninakathiya
28 Sep 2024, 06:46 PM
Sellur Raju About Senthil Balaji : செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்ற மு.க.ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Sellur Raju About Senthil Balaji : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழிற்பேட்டை மற்றும் சிவந்திபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடைகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இருந்து, திமுக ஊழலுக்கு எதிரான கட்சி என்ற மாயை அகற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் தான் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.  திமுக ஆட்சியில்தான், அமைச்சராக இருந்து ‌செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நாட்களை சாதனையாக கூறுகின்றனர். இதனை மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது. செந்தில் பாலாஜியை முதல்வராக கூட ஆக்கலாம், அதற்கு விதி இருக்கிறது. ஆனால் மரபை பார்க்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் விதியை மதிக்கின்றாரா அல்லது மரபை கடைபிடிக்கின்றாரா என்பது அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தெரியவரும். ஒவ்வொரு தலைவரும் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கூறுவார்கள். 2026 இல் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரும். இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2026இல் திமுக எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது என்பதைத்தான் திருமாவளவன் கருத்தாக நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும். 2011இல் அதிமுக ஆளும் கட்சியாக வந்தது. எங்களுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சியாக வந்தது. அந்த வரலாறு 2026ல் திரும்பப் போகிறது.

செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்ற மு.க.ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. எதிர்பக்கம் இருந்தால் கோட்சே! தன் பக்கம் வந்து விட்டால் காந்தி என்று சொல்வதைப்போல ‌செந்தில் பாலாஜி விவாகரத்தை கையாளுகிறது என்று சாதாரண பாமர மக்கள் கூட எள்ளி நகையாடுகின்றனர்.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 கோரிக்கை கொடுத்தால் நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அதில் கொடுக்கப்பட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில், மக்களை தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால்  தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் ஏமாற்றும் அரசாக உள்ளது.

ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். தனது இருப்பைக் காட்டிக்கொள்ள தர்மயுத்தம் நடத்தப் போவதாக கூறுகிறார்” என்று தெரிவித்தார்.