அரசியல்

கல்வி விருது விழா.. அன்பு தம்பி தளபதி விஜய்.. முதல் ஆளாய் வாழ்த்து சொன்ன சீமான்

By Kumudam News
28 Jun 2024, 11:58 PM
ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் தம்பி விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜய்.

10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று பரிசு வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறார். மாணவர்களுடன் பெற்றோர்களும் மேடையில் கவுரவிக்கப்படுகின்றனர். அனைவருடனும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் விஜய். 

நடிகராக இருந்த விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நடைபெறும் விழா இதுவாகும். இந்த விழாவில் பேசிய விஜய் பெரிய அளவில் அரசியல் பேசவில்லை. போதைக்கு அடிமையாகக் கூடாது என்று மாணவர்களை உறுதிமொழி எடுக்கச் சொன்னார். இந்த விழா குறித்து முதல் ஆளாக வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். 

இது தொடர்பாக சீமான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார் விஜய். மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் இந்த முறை நாம் தமிழர் கட்சி 8 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாமா என யோசித்து வருகிறார் சீமான். அதற்கு முன்னோட்டமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்கியுள்ள சீமான், அதிமுக, தேமுதிக, விஜய் ஆகியோரின் ஆதரவை கோரி வருகிறார். இந்த கட்சிகள் இணையும் பட்சத்தில் அது திமுகவிற்கு பெரிய அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும் நிச்சயம்.முதல்வர் கனவில் இருக்குட் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பதை  2026 சட்டசபை தேர்தல் களம் முடிவு செய்யும்.