இந்தியா

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள்.. கேரளாவில் தமிழர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

By Christon
01 Oct 2025, 09:29 AM
கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர்.

சம்பவத்தின் விவரம்

உயிரிழந்த தொழிலாளர்கள் மூவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் கம்பத்தைச் சேர்ந்த ஜெயராம், மற்ற இருவரும் கூடலூரைச் சேர்ந்த சுந்தரபாண்டி மற்றும் மைக்கேல் ஆவர்.

நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், இந்த மூன்று தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். உள்ளே இருந்த நச்சு வாயுவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் உள்ளேயே மயங்கி விழுந்துள்ளனர்.

உடல் மீட்பு நடவடிக்கை

சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால், கழிவுநீர்த் தொட்டிக்குள் விஷவாயு நிரம்பியிருந்ததால், மீட்புக் குழுவினர் நேரடியாக உள்ளே இறங்க முடியவில்லை.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினரும், மீட்புக் குழுவினரும் கழிவுநீர்த் தொட்டிக்கு அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி, உள்ளே இறந்த மூன்று நபர்களின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் போராடிய பிறகு, மூன்று சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்தச் சம்பவம் கேரளாவில் தமிழகத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.