Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

100 Days of PM Modi 3.0 : 100 நாட்களில் பிரதமர் மோடி செய்தது என்ன?.. ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட அமித்ஷா!

By Kumudam News
17 Sep 2024, 06:33 PM
100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.

100 Days of PM Modi 3.0 BJP Goverment : மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பிரதமர் மோடி இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து இன்று 100 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில் பதவியேற்ற 100 நாட்களில் பிரதமர் மோடி அரசு செய்தது என்ன? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரிப்போர்ட் கார்டு வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, மோடி அரசு 100 நாட்கள் செய்ததை அடுக்கடுக்காக பட்டியலிட்டார். இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* மத்திய அரசு பதவியேற்றத்தில் இருந்து ரூ.15 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இதில் ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் 25,000 கிராமங்களை சாலைகள் மூலமாக இணைக்கும் திட்டமும் அடங்கும். 

* மேலும் ரூ.50,600 கோடி மதிப்பீட்டில் நாடு முழுவதும் முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

* மகாராஷ்டிராவின் வாத்வான் பகுதியில் ரூ.76,000 கோடியில் புதிய துறைமுகம் கட்டப்படும்.

* ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்று கொண்டு வரப்பட்டுள்ளது. 

* ஒரே நாடு ஒரே பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

* பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும். 

* சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி, மேற்கு வங்கத்தில் உள்ள பாக்டோக்ரா. பீகாரில் உள்ள பிஹ்தா ஆகிய விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அகட்டி மற்றும் மினிகாயில் புதிய விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

* PM Kisan Samman Yojana திட்டதின்கீழ் 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது; இதுவரை 12.33 கோடி விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

* அடுத்த 10 ஆண்டுகளில் செமிகண்டக்டர் துறையில் இந்தியா உலகளவில் முக்கிய பங்கு வகிக்கும்.

* 2.5 லட்சம் வீடுகளுக்கு சோலார் மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன; 8 புதிய ரயில் பாதை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

* 4.10 கோடி இளைஞர்கள் பயனடையும் வகையில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதன்மை தொழில் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய திறன் பயிற்சியளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

* ஆங்கிலேயர் ஆட்சி கால சட்டங்கள் அகற்றப்பட்டு 3 புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.