இந்தியா

"நம்மள ஏமாத்திட்டாங்க சித்தப்பா.." மட்டனுக்குப் பதில் சிக்கன்.. கல்யாணத்தில் களேபரம்!

By Christon
11 Jul 2026, 03:51 PM
பீகாரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மதிய உணவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மதிய உணவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் நகரில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. முகமது அன்வரின் மகனான முகமது அப்துல்லாவிற்கும், முகமது ஜாவேத்தின் மகளுக்கும் கடந்த 9 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் திருமணம் சுமுகமாக நடந்து முடிந்தது.

மணமகள் வீட்டார் தங்களுக்கு மட்டன் (ஆட்டுக்கறி) விருந்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்ததாக மணமகன் வீட்டார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அனைவரும் சாப்பிட அமர்ந்த போது தட்டுகளில் மட்டனுக்குப் பதிலாக சிக்கன் பரிமாறப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த மணமகன் வீட்டார் அங்கேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருவீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாய்த்தகராறு, அடுத்த சில நிமிடங்களில் பெரிய கைகலப்பாக மாறியது. மணமகள் வீட்டார் மாப்பிள்ளை தரப்பில் வந்தவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், அங்கிருந்த ஆண்கள் சிலர் கைகளில் தடிகள் மற்றும் வாள்களை ஏந்தி விருந்தினர்களைத் தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த மோதலில் காயமடைந்த சுமார் 12 பேர் உடனடியாக சிம்ரி பக்தியார்பூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.